கோப்பாய் கல்வியியற் கல்லூரியிலிருந்து வெளியேறியது இராணுவம்! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம்களுக்கு விடுப்பை முடித்து கடமைக்குத் திரும்பும் படையினரை தங்கவைத்து பரிசோதனைகளை முன்னெடுக்கும் வசதி கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இல்லை எனத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

எனினும் தனிமைப்படுத்தல் நிலையத்தை (இராணுவத்தால் கூறப்படும் போக்குவரத்து மையம் – Transit Centre) திருநெல்வேலி பாற்பண்னைப் பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்தின் புதிய கட்டடம் அல்லது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு மாற்றத் திட்டமிடப்படுவதாக அறிய முடிகிறது.

விடுவிப்பில் நிற்கும் முப்படையினரையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு பாதுகாப்பு அமைச்சால் நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டது. அவர்கள் தமது கடமைக்குத் திரும்ப வசதியாக இன்று திங்கட்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோப்பாயில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டு மாணவர் விடுதிகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக நேற்று மாலை மாற்றப்பட்டன.

அது தனிமைப்படுத்தல் நிலையம் இல்லை என்றும் கடமைக்குத் திரும்பும் படையினரை பரிசோதனை செய்து முகாம்களுக்கு அனுப்பும் போக்குவரத்து மையம் என்று இராணுவம் தெரிவித்திருந்தது. அங்கு நேற்றிரவு முதல் இராணுவத்தினரும் அழைத்துவரப்பட்டனர்.

இராணுவத்தினரின் இந்தச் செயற்பாட்டுக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியைச் சூழவுள்ள மக்களும் அரசியல் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் தமக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை எனத் தெரிவித்து இன்று மாலை அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறினர்.

இதற்கு இடையில் திருநெல்வேலி பாற்பண்னைப் பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய கட்டடம் அல்லது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய இரண்டும் இன்று ஆராயப்பட்டன.

அவற்றில் ஒன்று தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்படலாம் என்று அறியமுடிகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வசமுள்ள மாணவர் விடுதிகள், விடுதிகளின் அறைகள், பௌதீக வளங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கடந்த வாரம் கோரப்பட்டது. அந்த விவரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்டிருந்தது.
Previous Post Next Post