பிரான்ஸ் அரசின் அறிவிப்பால் லாச்சபலுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் தமிழர்கள்! (வீடியோ)

மே 11க்கு பின்னராக பொதுப் போக்குவரத்துக்களில் வேலை செய்பவர்கள்  மட்டுமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இதனை மீறுபவர்கள் மீது தண்டம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இன்னமும் உயிர்புடன் சூழலும் சிவப்பு பிராந்தியமாக இல்-டு-பிரான்ஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிராந்திய போக்குவரத்து நிர்வாகம் இம்முடிவினை அறிவித்துள்ளது.

காலை 06h30 இலிருந்து 9h30 வரையும், மாலை 16h00 இலிருந்து 19h00 வரை வேலைக்குச் செல்பவர்களிற்காக மட்டுமே பொதுப்போக்குவரத்துக்களில் பயணிக்க முடியும்.

இந்த நேர எல்லைக்குள் வேலைக்குச் செல்பவர்கள், தமது வேலைத்தளத்தில் இருந்து அத்தாட்சிப் பத்திரம் (attestation employeur) பெற்று வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீறுபவர்கள் மீது 135யுறோ அபராதம் தண்டம் விதிக்கப்படும்.

மேலும் மருத்துவம், நீதி,நிர்வாக அலுவல்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்பவர்களுக்கும் குறித்த நேரத்தில் அனுமதி வழங்கப்படுகின்றது.

இதேவேளை பொதுப்போக்குவரத்துக்களில் சுவாசக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை மட்டுமல்லாது சமூக இடைவெளியினை பேணும் அடையாளங்களும் தொடருந்து நிலையள்களில் இடப்பட்டிருக்கும். இதனை மீறுபவர் மீதும் தண்டம் விதிக்கப்படும்.

இது இவ்வாறிருக்க இவ் அறிவித்தலால் லாச்சப்பல் பகுதிக்குச் சென்று அங்குள்ள தமிழர் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுவதாக இங்கு வாழும் தமிழர்கள் வேதனை தெரிவித்து தாங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
Previous Post Next Post