யாழில் வளர்ப்பு நாயைக் கடத்தி 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற கும்பல்!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

 அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை. அந்நிலையில் அவர்கள் “பொமேரியன்” இன நாய் ஒன்றினை மிக செல்லமாக வளர்த்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் வளர்ப்பு நாய் வீட்டில் நின்ற நிலையில் திடீரென காணாமல் போயுள்ளது. அதனை அவர்கள் அயலில் தேடி அலைந்து எங்கும் கிடைக்காததால் மனமுடைந்திருந்தனர்.

நாய் காணாமல் போன அன்றைய தினம் மாலை அவர்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் வசிக்கும் இரு இளைஞர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து உங்கள் நாயை ஒருவர் பிடித்து வைத்துள்ளார். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நாயை தருவதாக கூறினார். நாய் வேணும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் தாருங்கள் என கேட்டுள்ளனர்.

தம்பதியினரும் அதற்கு சம்மதித்து அவர்கள் கேட்ட பணத்தினை கொடுத்துள்ளனர். பணத்தினை பெற்று சென்றவர்கள் அரை மணிநேரத்தில் அவர்களின் நாயை கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு சென்றனர்.

தம்மிடம் பணம் பெற்று சென்றவர்களே நாயை தமது வீட்டில் இருந்து பிடித்து சென்று பணத்தினை பெற்றுக்கொண்டு நாயை தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என தம்பதியினர் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தால் தமது செல்லப்பிராணியான நாய்க்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ எனும் பயத்தில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை.
Previous Post Next Post