பிரான்ஸில் வீதிக்கு வந்த உணவகங்கள்! நீதிமன்றத்தை நாடும் பொதுமக்கள்!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த உணவகங்கள் மீளவும் 95 நாட்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பரிஸ் நகர குடிவாசிகள் பலர் தமது அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மேசைகளுக்கு இடையிலும் 1 மீற்றர் இடைவெளி, பத்து பேருக்கு மேல் ஒன்றாக இருப்பதற்கு மேசைகள் இடக்கூடாது உட்பட பல்வேறு சுகாதாரக்கட்டுப்பாடுகளுடனேயே உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.



குறிப்பாக உணவகங்களுக்கு வெளியே மேசைகளை இட நகரசபை அனுமதித்துள்ள நிலையில், நடைபாதை வழித்தடங்கள் எங்கும் நிரம்பிவழியும் உணவக மேசைகளால் அப்பகுதி குடிவாசிகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளதோடு, இரவு 22 மணிக்கு மேலாகவும் கடும் சத்தமாக அப்பகுதி காணப்படுவதனால் தமது இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக குடிவாசிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

பல இடங்களில் வன்முறைகளும் ஏறப்பட்டிருப்பது அப்பகுதி அமைதியினை கெடுத்துள்ளதாக குடிவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உணவகங்களின் வெளிச்செயற்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினை விரும்பாத குடிவாசிகள் பலர் தமது மாடிகளில் இருந்து விரும்பத்தகாத பொருட்களை கீழ் நோக்கி எறிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.



காவல்துறையில் முறைப்பாடுகளை செய்துள்ள குடிவாசிகள் பலர், நீதிமன்றத்தின் உதவியை நாட இருப்பதாகம் லு பரிசியன் பத்திரிகை தெரிவிக்கின்றது.

பொதுமுடக்கம் காரணமாக உணவகங்கள் பல வருவாய் இழப்பினை சந்தித்துள்ளதோடு, இதனோடு தொடர்புடைய பல தொழில் வாய்ப்புக்களும் நெருக்கடியினை சந்தித்துள்ளன.

இதன் வீழ்ச்சியில் இருந்து மீட்கும் வகையிலேயே உணவகங்களுக்கு வெளியே மேசைகளை இட நகரசபை அனுமதித்துள்ளதோடு, அதற்கான ஊக்கத்தையும் வழங்கியுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பர் 30 தேதி வரை வெளி இருக்கைகளுக்கு அனுமதித்துள்ளது.

Previous Post Next Post