ஊரடங்குச் சட்ட நேரத்தில் மாற்றம்!

நாட்டில் நாளை சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீளவும் பின்னிரவு 11 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை ஜூன் 6ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தினமும் பின்னிரவு 11 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் இந்த அறிவிப்பின் ஊடாக மார்ச் 20ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நாளை, ஜுன் 06 சனிக்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை.

அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடத்திச்செல்லும் போதும், அன்றாட இயல்பு வாழ்க்கையின் போதும் கொரோனா ஒழிப்பு சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசு அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது – என்றுள்ளது.
Previous Post Next Post