காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இடையே அடிபிடி! 7 பேர் கைது!! (வீடியோ)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (27) பிற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபட்ட 7 பெண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மற்றும் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் என்ற இரண்டு அமைப்புகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு காணாமல் போனோர் சங்கம் என்ற அமைப்பினால் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்திற்கான புதிய நிர்வாகமொன்றை உருவாக்க முற்பட்ட போதே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் என்ற அமைப்பும், நிர்வாக குழுவும் உள்ள நிலையில், வடகிழக்கு காணாமல் போனோர் சங்கம் என்ற அமைப்பு வவுனியா மாவட்டத்தில் புதிதாக காணாமல் போனோர் சங்கத்தை உருவாக்க தயாராகி வருவதாக வவுனியா மாவட்ட காணாமல் போனோர் சங்கம் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள், புதிய அமைப்பொன்றை உருவாக்குவதற்கு எந்த சந்தர்ப்பமும் வழங்கப் போவதில்லை என வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியா நகரசபை மண்டபத்தை நாளாந்த வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் வவுனியா மாவட்டத்திற்கு புதிய குழுவை நியமிக்க ஆயத்தமான போது இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்ட வேளையில், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் மாநகர சபை வளாகத்தில் மோதலில் ஈடுபட வாய்ப்பளிக்காமல், வவுனியா நகரசபையினரால் வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் அங்கு வந்து மோதலில் ஈடுபட்ட 7 பெண்களை கைது செய்தனர்.
Previous Post Next Post