![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn5UokpBhapjOTrN-GZYa-4sVCvC-4YK4qM0dq5O-bLeZs6_AsWIWXaB2kEVOu4OgfbfVna5BMeAdbnJJ1xbm6zvhL1C9AcB1nkxnopOZxsma2feFFHJC3sdcSHHZkVfisXHmREZK24qkPes14xuSWoOIMKjqgUP6mn5KEUQZXBC697whus2oCBvHrLoY/s16000/00.jpg)
இதன் முதலீட்டு மதிப்பு அண்ணளவாக 5000 பில்லியன் ரூபாய்கள். கனேடிய முதலீட்டாளருடன் ( புலம்பெயர் யாழ்ப்பாண தமிழரும், நடிகை ரம்பாவின் கணவருமான இந்திரகுமார் - பத்மநாதன்) இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (16) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி அலுவலகத்தின் தேசிய பாதுகாப்பு பிரதம ஆலோசகரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகையின் நிர்மாணப் பணிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இது 2010-2015 ஐந்தாண்டுகளுக்குள் இருந்தது. எனினும் இந்த ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்கும் போது புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதனையடுத்து கடந்த காலத்தில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த மாளிகை வளாகம் 30 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது,
அதில் 12 ஏக்கரில் இந்தக் கட்டிடத் தொகுதிகள் அமைந்துள்ளன. எஞ்சிய நிலம் அப்பகுதி மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்டதுடன், அரசுக்கு சொந்தமான 12 ஏக்கரை SLIIT நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட முதலில் முடிவு செய்யப்பட்டது.
மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட எஞ்சிய 17 ஏக்கர் காணியை வருமானத்தின் அடிப்படையில் SLIIT நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) இந்த ஜனாதிபதி மாளிகையின் பணிகளை விரைவாக முடித்து முழு அளவிலான தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றும் என நம்புகிறது.
அதேசமயம் இந்த தகவல் தொழில்நுட்பம் பல்கலைக்கழகம் northern Uni. IT பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும். ஆண்டுதோறும் சுமார் 1500 மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் திறன் கொண்டது.
மேலும், இந்த தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கட்டப்பட்டதன் பின்னர், வடக்கிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு தகவல் தொழில்நுட்பம் படிக்க கொழும்புக்கு வர வேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண பிள்ளைகளின் தகவல் தொழில்நுட்ப அறிவு விருத்தியடைந்து அவர்கள் தமது அறிவை பூரணப்படுத்த முடியு மாதலால் அவர்கள் எதிர்கால நவீன உலகிற்கு பொருந்துவார்கள் என இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்படும்.
மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, இந்திரகுமார் - பத்மநாதன் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் எல். ரத்நாயக்க மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை யாழ்ப்பாணம் - கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்புத் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCa1CNPIUVHmzeRbyqYEcaEujzRUosB9W6T3pxoCxnVcylqY2M-cLOAeRsNiFekfhZU798aFf0fF4u3wEW4A3ot8J40QI8fIEplgxXxA_CvTxoGhvqAX7ES9oyq8_aS3e9AqM0mDO0yMAK2MB_tc0tWuEbz4ODFKviZ97acEiZxPYNLYrhe44iTdldvzI/s16000/01.jpg)