யா/செங்குந்த இந்துக் கல்லூரிக்கு பொருத்தமான அதிபரை நியமிக்கக் கோரிக்கை!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் செங்குந்த இந்துக் கல்லூரிக்குத் தகுதி வாய்ந்த, மிகப் பொருத்தமான அதிபரை நியமிக்க வேண்டும் என்று அந்தப் பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான கோரிக்கைக் கடிதம் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், வடக்குப் பிரதம செயலர், கல்வி அமைச்சின் செயலர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும்  பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கடந்த காலங்களில் சில வேண்டத்தகாத செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம் ஒன்று அல்லாத அதிபர்களின் பொருத்தமற்ற நிர்வாக நடவடிக்கைகளால் காலத்துக் காலம் கல்லூரியின் தனிச் சிறப்புக்கள், கல்வி, பண்பாடு, கலாசாரம், விளையாட்டு, பௌதீகவளம், நன்மதிப்பு போன்ற விழுமியங்கள் சீர்குலைந்தும், பின்னகர்ந்தும் போவதால் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக கல்லூரியானது இழி நிலைக்குச் செல்கின்றது.

எனவே கடந்த 10 ஆம் திகதி முதல் எமது கல்லூரியிலிருந்து மாற்றலாகிச் சென்ற அதிபருக்குப் பதிலாக கல்வி நிர்வாக சுற்றறிக்கைகளுக்கு அமைய உரிய சட்டப் பிரகாரம் பொருத்தமான கால அவகாசத்தில் தகுதி வாய்ந்த, தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர் ஒருவரை பகிரங்கமாக விண்ணப்பம் கோரி, நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்து நியமிப்பதன் மூலம் எவ்வித பக்கச்சார்பற்ற சுயாதீனமான செயற்பாடுகளால் எமது கல்லூரியை மீளவும் நன்னிலைக்கு இட்டுச் செல்லும் வகையிலான சீரிய நிர்வாகத்துக்கு வழியமைக்க வேண்டும் என்றுள்ளது.
Previous Post Next Post