சீனாவில் குரங்கு வைரஸ் தொற்றிய மருத்துவர் மரணம்! முதல் மனித உயிரிழப்புப் பதிவு!!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
குரங்குகளின் இருந்து மிக அரிதாகப் பரவுகின்ற வைரஸ் கிரிமி ஒன்றினால் பாதிக்கப்பட்ட சீன நாட்டின் கால்நடை மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார் என்று அறிவிக்கப்படுகிறது.

"monkey B virus" எனப்படுகின்ற புதிய வைரஸ் கிரிமியினால் அண்மையில் ஏற்பட்ட முதலாவது மனித உயிரிழப்பு இது என்று சில சர்வதேச ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளன.

பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வு நிலையத்தில் பணியாற்றி வந்த 53 வயதான கால்நடைச் சத்திரசி கிச்சை நிபுணரே புதிய வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்பதை சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவகம்(Chinese Center for Disease Control and Prevention) உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச்சில் இறந்த இரண்டு குரங்குகளின் உடல்களைப் பிரித்து ஆய்வு
மேற்கொண்ட அவர், பின்னர் நோய்த் தொற்றுக்கு இலக்கானார் என்று கூறப்
படுகிறது. அவருக்குக் கடும் காய்ச்சல், வாந்தி, மற்றும் நரம்புப் பாதிப்பு அறி குறிகள் ஏற்பட்டுள்ளன.  சிகிச்சைகளுக்குப் பின் கடந்த மே மாதம் 27 ஆம் திகதிஅவர் உயிரிழந்தார்.  அவருக்கு குரங்கு-பி வைரஸ் தொற்றியிருப்பதை மருத்துவ ஆய்வுகள் உறுதிசெய்தன.
  • "குரங்கு-பி வைரஸ்" என்றால் என்ன?
பொதுவாக் "குரங்கு அம்மை" (monkeypox) எனப்படும் வைரஸ் கிரிமியில் இருந்து மாறுபட்ட புதிய இனத்தைச் சேர்ந்தது குரங்கு-பி வைரஸ். அதனை herpesvirus B என்றும் அழைக்கின்றனர்.உலகிற்கு அது புதியது அல்ல. ஆனால் அதன் தொற்றுக்கள் மிக அரிதானவை.

தற்போது உலகில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் போன்றே விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பாய்கின்ற (zoonotic) ஒரு வைரஸ் கிரிமியே 'குரங்கு-பி வைரஸ்' (monkey B virus) என அழைக்கப்படுகிறது.

மனிதருக்குத் தொற்றிய பின்னர் அது மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவாது என்றே அதனை ஆய்வாளர்கள் இன்னமும் நம்புகின்றனர். 1932 ஆம் ஆண்டில்
முதன் முதலில் கண்டறியப்பட்ட அந்த வைரஸ் உலகில் இதுவரை அரிதாக 50
பேரைப் பீடித்துள்ளது. 

அவர்களில் அநேகமானோர் கால்நடை ஆய்வு மருத்துவத்துடன் தொடர்புடையவர்கள் என்று அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப் பாட்டுநிலையத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

கொரோனா வைரஸ் ஒருவகை வௌவால் இனங்களில் இருந்து மனிதர்களுக்குப் பாய்வதாக நம்பப்படுவது போன்று "குரங்கு-பி வைரஸ்" ஆதிகால குரங்கு இனமாகிய macaque monkeys எனப்படும் குரங்குகளின் மூலம் மனிதர்களுக்குத் தொற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அவ்வாறு ஒரு குரங்கு இனத்தில் மட்டுமே காணப்பட்ட அந்த வைரஸ் தற்போது வேறு பல குரங்கு இனங்களிலும் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குரங்குகளுடன் நெருக்கமான தொடர்புடையவர்களுக்கு அவற்றின் துப்பல், சளி, சிறுநீர் போன்றவற்றால் பரவக் கூடிய இந்த வைரஸின் அறிகுறிகள் பெரும்பாலும் கொரோனா வைரஸின் நோய்க்குறிகளை ஒத்தவை.

குரங்குகளுடன் தொடர்புடையவர்களுக்குத் தொற்றக் கூடியது என்ற நிலையில்
மிகவும் விழிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்ற குரங்கு-பி வைரஸ், மனிதர்களில் தொற்றும் போது அதனால் மரணம் ஏற்படுவது 80 வீதம் உறுதியானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குரங்கு-பி வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றிய சம்பவம்
எதுவும் உலகில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவ்வாறு பரவிய மிக அரிதான ஒரு சம்பவம் பற்றிய சான்றுகள் உள்ளன என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதனால் சீன அதிகாரிகள் இது விடயத்தில் உஷார் அடைந்துள்ளனர்.

உயிரிழந்த மருத்துவரோடு தொடர்புகள் கொண்டிருந்த பலர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். அவர்களில் இருவரது உடல் திரவங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து பரவியது என நம்பப்படுகின்ற கொரோனா வைரஸ் பெருந்
தொற்று நோயாக உலகைப் பீடித்து உலுக்கி வருகின்ற நிலையில், அங்கிருந்து மற்றொரு புதிய வைரஸ் பற்றி வெளியாகியிருக்கின்ற இந்தச் செய்தி உலகெங்கும் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.
Previous Post Next Post