கொரோனாத் தொற்று; பருத்தித்துறை நகர் முடக்கம்! வங்கிகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் பூட்டு!!


பருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மருந்தகங்கள் உள்பட அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் திறக்க முடியும். பருத்தித்துறை நகரில் இருந்த பேருந்து தரப்பிடம் மூடப்பட்டுள்ளதால் டிப்போ சந்தியிலிருந்து பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

இந்த கட்டுப்பாடுகள் உடன் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் மூவருக்கு தொற்று உள்ளமை இன்று அன்டிஜன் பரிசோதனையில் தெரிய வந்தது. அதனையடுத்து சந்தை முடக்கப்பட்டது.

பருத்தித்துறை பெருநகர், 401 கிராம அலுவலகர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெரு, தும்பளை வீதி, பத்திரகாளி வீதி, வீ எம் வீதி, கடற்கரை வீதி, கொட்டடி வீதி அனைத்திலிருந்து நகருக்குள் உள் நுழைய முடியாது.

இதேவேளை வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இன்று 40 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மூன்று நாள்களில் 88 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post