வானில் விமானங்கள் வண்ணமிட பாரிஸில் ரசிகர்கள் கூடி குதூகலம்! (படங்கள்)

  • குமாரதாஸன், பாரிஸ்.
ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவில் இன்று ஒலிம்பிக் கொடி பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாச் (Thomas Bach) ஒலிம்பிக் கொடியை ரோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்க்கேயிடம்(Yuriko Koike) இருந்து வாங்கி பாரிஸ் மேயரின் கைகளில் கொடுத்தார்.
 
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான முழுப் பொறுப்பும் பாரிஸ் வசம் கைமாறியிருப்பதைக் குறிக்கின்ற கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று ஈபிள் கோபுரச் சூழலில் நடைபெற்றன. 

ரோக்கியோவில் இருந்து பதக்கங்களுடன் திரும்பிய வீரர்கள் உட்படப் பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நகரில் Trocadéro பகுதியில் நிறுவப்பட்ட ஒலிம்பிக் கிராமத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பரித்தனர்.

அச்சமயம் விமானப்படையின் அணிவகுப்பு விமானங்கள் (Patrouille de France) வானில் பறந்து தேசியக் கொடியின் மூவர்ணங்களை உமிழ்ந்தன. அதிபர் எமானுவல் மக்ரோன் சிறுவர்கள் இளம் விளையாட்டு வீரர்கள் சகிதம் ஈபிள் கோபுரத்தின் முதல் தளத்தில் தோன்றுகின்ற வீடியோப் பதிவு ஒன்றைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

அந்த வீடியோவில் "உயர்வாக - வேகமாக - வலுவாக - ஒற்றுமையாக" (higher, faster, stronger” “Together”) என்ற வார்த்தைகளை மக்ரோன் பிரெஞ்சு மொழியில் உரத்த குரலில் எழுப்பினார்.
 
ஒலிம்பிக் போட்டிகள் சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாரிஸில் நடத்தப்படவுள்ளன. அதற்கான முழு ஏற்பாடுகளும் களைகட்டத் தொடங்குகின்ற ஓர் ஆரம்ப நாளாக நேற்றைய தினம் அமைந்துள்ளது.

கடைசியாக 1924 இல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. பாரிஸ் மேயரிடம் ஒலிம்பிக் கொடி கையளிக்கப்பட்ட சமயத்தில் ஈபிள் கோபுரத்தில் பிரமாண்டமான ஒலிம்பிக் கொடி ஒன்றைப் பறக்கவிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

ஆனால் சுமார் 5 ஆயிரத்து 800 சதுர அடி அளவு கொண்ட-ஒர் உதைபந்தாட்டத்திடலின் பரப்புக்குச் சமனான-அந்தக் கொடியை கோபுரத்தின் உயரத்தில் ஏற்றுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.

பாரிஸில் இன்று நிலவிய காற்றுடன் கூடிய வானிலை காரணமாகவே ஹீலியம் வாயு(helium) நிரப்பப்பட்ட அந்தக் கொடியைப் பறக்க விடுவது ரத்துச் செய்யப்பட்டதாகப் பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்திருக்கிறது.

பிரான்ஸில் இம்முறை கோடை விடுமுறைக் காலத்தில் லேசான குளிர், மழைக் காலநிலையும் அயல் நாடுகளில் வெப்ப அனல் மற்றும் காட்டுத் தீ அனர்த்தங்களுமாக ஜரோப்பாவில் மிகவும் குழப்பமான வானிலை நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post Next Post