இரண்டாம் வருடமாக இம்முறையும் பிரான்ஸ் - பாரிஸ் தேர் வீதியுலா நடைபெறாது!

பாரிஸ் நகரில் தமிழர்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் அமைந்துள்ள மாணிக்க
விநாயகர் ஆலயத்தின் பஞ்சரத தேர்த் தெருவீதியுலா சுகாதார நிலைமைகள் காரணமாக இந்த முறையும் நடைபெறமாட்டாது.

நாளை மறுதினம் (ஓகஸ்ட் 29) ஞாயிற்றுக்கிழமை தேர்த் தெரு வீதியுலா நடைபெறும் என்று ஆலயக் கலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரிஸ் நகரசபையின் அனுசரனையோடு வருடாந்தம் ஓகஸ்ட் மாதங்களில் 
ஆலயத்தின் தேர்த் திருவிழா நகரின் முக்கிய வீதிகளில் கண்கவர் தெருவீதியுலாவாக நடத்தப்படுவது வழக்கம். 

இந்துக்கள் உட்பட பல்வேறு மொழி பேசுகின்ற வெளிநாட்டவர்களும் தேர்த்திருவிழா காண்பதற்காகப் பல்லாயிரக்கணக்கில் திரள்வது வழமை. கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஆண்டு தேர்த் திருவிழா இடம்பெறவில்லை.

இம்முறையும் தேர்த் திருவிழா காண சுமார் 50 ஆயிரம் பேர் கூடுவர் என்று மதிப்பிடப்படுவதால் தற்போதைய சுகாதார நிலைவரங்கள் அதனை நடத்துவதற்கு இடமளிக்கவில்லை.

ஆனாலும் ஆலயத்தில் தேர்த் திருவிழா நாள் பூசைகள் அன்றைய தினம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post