ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அத்துமீறி கொரோனா பரப்பிய அல்லைப்பிட்டி பொதுச் சுகாதார பரிசோதகர்!!


கொரோனாத் தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரை அழைத்துக்கொண்டுவந்து யாழ்.ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் கொரோனாப் பரவல் அபாயத்தையும் ஏற்றபடுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரால் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 12.08.2021 அன்று தமது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை தீவிர தன்மை குறைந்த தொற்றாளர் என்ற அடிப்படையில் நாவற்குழி இடைத்தங்கல் முகாமுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அல்லைப்பிட்டி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் என்று தன்னை அறிமுகப்படுத்தியவர் சீருடை இன்றி மருத்துவமனைக்குள் பிரவேசித்து நோயாளர் அவசர சிகிச்சைப் பிரிவல் பலமுறை நுழைந்து அந்த நோயாளியை இடைத்தங்கல் முகாமுக்கு மாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மருத்துவர்கள் நோயின் நிலையையும், சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் பற்றிய அறிவுறுத்தல் வழங்கியும் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும் விதத்தில் அவர் நடந்து கொண்டார்.

அத்துடன், பலமுறை வைத்தியசாலை சிற்றூழியர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார். அவர் தன்னுடன் நோயாளியின் மகனை - முதலாம்தர தொற்று தொடர்பாளரையும் அழைத்து வந்து தொற்று பரவும் சூழலை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், கொரோனா பரவல் தன்மையை கட்டுப்படுத்த உதவுவதுடன், மருத்துவமனை ஊழியர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டாளர்களால் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post