தெற்கு ஆபிரிக்க நாடுகளில் வீரியமான புது வைரஸ் திரிபு கண்டறிவு! பயணத் தடை விதிக்கும் ஐரோப்பிய நாடுகள்!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
மிக மோசமான பிறழ்வுகளை எடுக்கின்றவைரஸ் திரிபு ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை தென் ஆபிரிக்கா உட்பட தெற்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

தென் ஆபிரிக்கா, லெசோதோ, போட்சுவானா, சிம்பாப்வே, மொசாம்பிக் நமீபியா,ஈஸ்வதினி (South Africa, Lesotho, Botswana, Zimbabwe, Mozambique, Namibia Eswatini) ஆகிய ஆறு நாடுகளிலேயே இந்தப் புதிய-ஆபத்தான - வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 

இந்த நாடுகளுடனான போக்குவரத்துகளை இடைநிறுத்தம் அவசர முடிவுகளை ஐரோப்பிய நாடுகள் சில எடுத்துள்ளன.

இதுவரை கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து தோன்றிய கிரிமிகளில் மிக ஆபத்தான திரிபு என்று அதனை அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.தீவிரமான பிறழ்வுகளை (heavily mutated) எடுக்கக் கூடியது என்று அறியப்படுகின்ற இந்த ஆபிரிக்கத் திரிபு தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் முதலில் தோன்றிய டெல்ரா திரிபு வைரஸின் பல பிறழ்வு வடிவங்களே இன்று உலகெங்கும் தடுப்பூசிகளை எதிர்த்து நின்று புதிது புதிதாகத் தொற்றலைகளை உருவாக்கி வருகின்றன. தெற்கு ஆபிரிக்காவில் காணப்படுகின்ற - பெயரிடப்படாத-இந்தத் திரிபும் வருங்காலங்களில் கட்டுக்கடங்காமல் பரவுகின்ற ஆபத்து இருக்கிறது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

"வைரஸ் பிறழ்வுகளின் அசாதாரணமான ஒரு தோற்றம் இது" என்று தென் ஆபிரிக்காவின் தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நிலையத்தின் (Centre for Epidemic Response and Innovation in South Africa) பணிப்பாளர் பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா (Prof Tulio de Oliveira) குறிப்பிட்டிருக்கிறார்.

ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் இது மிக மோசமான வைரஸ் உருமாற்றம் என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்தி உள்ளன. ஆனால் அது உலகில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் காண்பதற்குச் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டி உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய திரிபு சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்(Sajid Javid) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 

புதிய வைரஸ் தோன்றியுள்ள ஆறு ஆபிரிக்க நாடுகளையும் பிரிட்டிஷ் அதிகாரிகள் சிவப்புப் பட்டியலில் சேர்த்து அந்நாடுகளுடனான விமானப் போக்குவரத்துகளை இடைநிறுத்தி உள்ளனர்.

அறிவியல் பெயரில் B.1.1.529 எனக் குறிப்பிடப்படுகின்ற இந்தத் திரிபுக்கு கிரேக்க எழுத்துக்களில் புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு ஓரிரு தினங்களில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post