எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு!

இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் சாந்த சில்வா தெரிவிக்கையில், விசாக பூரணை தினம், விடுமுறை தினம் என்பதால் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்றைய தினம் எரிபொருள் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும்.

மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் கிடைக்கப்பெறும் என்பதுடன், ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய கடன் எல்லை வசதி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகுதி டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது.

டொம் எல்வின் நிறுவனத்தின் ஊடாக குறித்த டீசல் தொகை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரையில் 4 இலட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post