முல்லைத்தீவில் கனடாவிலிருந்து வந்த 63 வயது தாத்தாவுக்கும் 23 வயதுப் பெண்ணுக்கும் இடையில் மலர்ந்த காதல்!

முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் கனடாவில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு பொலீசாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

23 வயது பெண்ணும் 63 வயதான முதியவருக்கும் ஏற்பட்ட காதலால் குறித்த பெண்ணைக் கடத்த முயன்றார் என குறிப்பிடப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவரும், தாக்கிய இருவரும் முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவருக்கு சில மாதங்களின் முன்னர் திருமணம் நடந்தது. எனினும், சிறிது காலத்தில், குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டது.

தனது 23 வயதான மனைவிக்கும், மனைவியின் நெருங்கிய உறவினரான 63 வயதான தாத்தா முறையான நபருக்குமிடையில் காதல் தொடர்பு இருப்பதாக கணவன் சுமார் ஒரு மாதத்திற்கு முன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த தாத்தா முறையான முதியவர், கனடாவில் நீண்டகாலம் வசித்தவர், தற்போது முல்லைத்தீவில் வசித்து வருகின்றார். பொலிசார் அந்த இளம்பெண்ணை அழைத்து விசாரித்த போது, 63 வயதான காதலனுடனேயே வாழப் போவதாக தெரிவித்தார்.

எனினும், பொலிசார் அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறினர். அத்துடன், பெற்றோர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனர். கடந்த ஒரு மாதமாக வெளித் தொடர்புகள் இல்லாமல் அந்தப் பெண், வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருந்தும் அந்தப்பெண்ணுக்கு தாத்தா நகைகள் பணம் என பல உதவிகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினமிரவு அந்த பெண்ணை கடத்திச் செல்ல வந்ததாக குறிப்பிட்டு, வாகனமொன்றை சேதமாக்கிய பெண்ணின் உறவினர்கள், வாகன சாரதியையும் நையப்புடைத்தனர்.

காதலனான தாத்தாவின் ஏற்பாட்டில் பிறிதொருவர் வாகனத்தில் வந்து அந்த பெண்ணை ஏற்றிச் செல்ல முற்பட்டதாக, பெண்ணின் உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாடகைக்கு பெறப்பட்ட வாகனமொன்றையே அந்த நபர் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலிற்குள்ளான வாகன சாரதியும், தாக்குதல் நடத்திய பெண்ணின் சகோதரர்கள் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post