வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை! நடந்தது என்ன? கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வவுனியா ஓமந்தை, மாணிக்கர்வளவுப் பகுதியில் நேற்றைய தினம் (17) வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது அப் பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது.

இருந்தும் குறுகிய நேரத்தில் குறித்த இருவரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலைச் சந்தேக நபர், தான் ஏற்கனவே வாங்கிய காட்டுக் கத்தியை உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்ததுடன், இருவரைத் தான் கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துச் சென்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அயலவர்கள் சடலம் மீட்கப்பட்ட வீட்டுக்குச் சென்று பார்த்தபோது இருவர் பெரும் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும், ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.

கோபால் குகதாசன் (வயது-40) மற்றும் சிவனு மகேந்திரன் (வயது-34) ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், சுப்பிரமணியம் சிவாகரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதுடன், நோயாளர் காவு வாகனமும் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந் நிலையில் அப் பகுதி மக்கள் சிலர் கொலைச் சந்தேகநபரைத் தேடி சென்ற நிலையில், அந் நபர் வீதியால் நடந்து செல்வதைக் கண்ட மக்கள், அப் பகுதியில் கடமையில் நின்ற போக்குவரத்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்கள். இதனையடுத்து குறித்த நபரைப் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த இரட்டைக் கொலையைத் தானே செய்ததாகத் தெரிவித்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவரின் வாக்குமூலத்தில், கரிப்பட்டை முறிப்பைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உழவு இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்யவிருந்த நிலையில், அதற்காக நேற்றிரவு அவர் மது விருந்து வைத்துள்ளார். அந்தவகையில் நாங்கள் நான்கு பேரும் ஒன்றாக இருந்து மது அருந்தினோம்.

போதை அதிகரித்த நிலையில் அவர்கள் என் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் நான் கோபத்துடன் அதிகாலை ஒரு மணியளவில் சம்பவ இடத்தை விட்டு, வீட்டுக்குச் சென்றேன்.

வீட்டுக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு மீண்டும் அதிகாலை 4 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்றபோது மூவரும் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் மூவரையும் கத்தி மற்றும் கோடாரியால் தாக்கினேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி:
Previous Post Next Post