எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனா நெருக்கடியை அடுத்து வருமான இழப்புகளைச் சந்தித்துள்ள குடும்பங்களுக்கு இரண்டாவது கட்டமாக விசேட நிதி உதவிகள் பல வழங்கப்படும் என்று அதிபர் மக்ரோன் கடந்த ஒக்ரோபர் மாதம் அறிவித்திருந்தார்.
அதன்படி நாடு முழுவதும் 4.1 மில்லியன் குடியிருப்பாளர்கள் பல விசேட கொடுப்பனவுகளைப் பெறுகின்றனர். அதில் ஒன்று 'பூஸ்' எனப்படும் கல்விக்கான நிதி உதவி பெறும் மாணவருக்கான 150 ஈரோக்கள் மேலதிக உதவித்தொகை ஆகும். இக்கொடுப்பனவு மாணவர்களது வங்கிக் கணக்குகளுக்கு வெள்ளிக்கிழமை (27-11-2020) வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, வீட்டு வாடகை உதவி(APL) பெறும் குடும்பங்களுக்கும், வதிவிட வாடகை உதவி பெற்றுவரும் 18-25 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கும் 150 ஈரோக்கள் விசேட உதவி வழங்கப்படுகிறது.
இதைவிட வீட்டு வாடகை உதவி(APL) பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தலா 100 ஈரோக்கள் விசேட தொகையும் இந்த வாரம் கிடைக்கவுள்ளது.
இவற்றைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. சகலருக்கும் அவர்களது வழமையான வங்கி கணக்குகளில் வெள்ளிக்கிழமை முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று குடும்ப நல உதவி மையம் (CAF – Caisse d'allocations familials) தெரிவித்துள்ளது.