காரைநகர் கொரோனா நோயாளியுடன் நெருங்கிப் பழகியவர்களின் பிசிஆர் முடிவுகள்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
காரைநகரில் அடையாளம் காணப்பட்ட கோவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடைய 43 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை (நவ.27) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் கடந்த சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாள்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

அதனையடுத்து காரைநகர், சங்கானை மற்றும் யாழ்ப்பாணம் மாநகரம் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

கோவிட் -19 நோயாளி தொடர்புடைய 43 பேரிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்களின் மாதிரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அனைவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. காரைநகரில் தனிமைப்படுத்தப்பட ஏனையவர்களுக்கும் படிப்படியாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த 70 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அனைவருக்கும் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
Previous Post Next Post