டிப்பர் வாகனத்தினாலேயே மிருசுவில் பிள்ளையார் ஆலயம் இடித்தழிப்பு! சாரதி கைது!! (CCTV இணைப்பு)


யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் கடந்த 7ஆம் திகதி இடித்து உடைக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ஆலயத்தை டிப்பர் வாகனம் ஒன்றினால் மோதியே உடைத்தமையை சிசிரிவி கமரா பதிவு ஊடாகக் கண்டறிந்தனர்.

அதன் அடிப்படையில் குறித்த டிப்பர் வாகனம் தொடர்பிலான தகவலினை பெற்று டிப்பர் வாகனத்தை தேடி வந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த டிப்பர் வாகனம் இன்று மாலை யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த போது கொடிகாமம் பொலிஸாரினால் வாகனம் வழிமறிக்கப்பட்டு வாகனத்தை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப கட்ட விசாரணையில் டிப்பர் சாரதி முல்லைத்தீவை சேர்ந்தவர் எனவும் , சாரதி முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி வருவதால் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இதேவேளை, இடித்தழிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் இன்றைய தினம் மீள கட்டும் பணிகளை சிலர் முன்னெடுத்து இருந்தனர்.

அந்தக் கோவிலை மீளக் கட்டியமைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்து மத விவகார ஆலோசகர் பாபு சர்மாவுக்கு பணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் புனரமைக்கப்படும் ஆலயம்


Previous Post Next Post