பருத்தித்துறை - இந்திய மீனவர்கள் கடலில் மோதல்! மூவர் காயம்!! 20 இந்திய மீனவர்கள் கைது!!!


வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுடன் ஏற்பட்ட மோதலில் பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை மீனவர்கள் படகுகளில் சென்றிருக்கின்றனர். அதன் போது வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீனவப் படகுகள் காணப்பட்டிருக்கின்றன.

அதேவேளை பருத்தித்துறை மீனவர்களின் வலைகளும் இந்திய மீனவ றோலர் படகுகளால் அறுக்கப்பட்டிருக்கின்றன.

சம்பவத்தை அடுத்து இது தொடர்பில் இரண்டு தரப்புக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது இந்திய மீனவர்கள் கூரிய ஆயுதங்கள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவத்தின் போது முனை பகுதியைச் சேர்ந்த தீபன், சுரேஸ்குமார், ரவிக்குமார் ஆகிய மீனவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு தயாராக கற்கள் உட்பட்ட பொருட்களை எடுத்துவந்திருந்தாகவும் பருத்தித்துறை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மோதல் தீவிரமடைந்த நிலையில் இலங்கை கடற்படையினர் அங்கு சென்றபோது இந்திய மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பருத்தித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் இரண்டு இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அன்டிஜன் பரிசோதனைகளின் பின்னர் நீரியல் வளத் திணைக்களத்தினர் ஊடாக மீனவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக நீரியல்வளத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
Previous Post Next Post