ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! பொது முடக்கத்தை அறிவித்தது நெதர்லாந்து!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
ஐரோப்பாவின் பல நாடுகளில்"கோவிட்" சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் முதல் நாடாக நெதர்லாந்து கோடை காலத்துக்குப் பிறகு முதல் முறையாக நாட்டில் பகுதியான பொது முடக்கத்தை (partial lockdown) அறிவித்திருக்கிறது.

அதிகரித்துவரும் வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அடுத்த மூன்று வார காலத்துக்கு இறுக்கமான பல விதிகளை பிரதமர் மார்க் ரூட்டே (Mark Rutte) அறிவித்திருக்கிறார்.

புதிய கட்டுப்பாடுகள் வருமாறு : 
  • அத்தியாவசியமற்ற கடைகள் (Non-essential shops) மாலை 18:00 மணியுடன் மூடப்படும்.
  • நெதர்லாந்தின் உணவகங்கள், அருந்தகங்கள், நவீன சந்தைகள் என்பன இரவு 20:00 மணியுடன் மூடப்படும்.
  • குறைந்தது 13 வயதுக்கு மேற்பட்ட நால்வர் மட்டுமே வீடுகளுக்கு வருகை தரமுடியும்.
  • பொது ஆர்ப்பாட்டங்கள் தடை, உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளரங்குகளில் நடத்த மட்டுமே அனுமதி.
  • இயன்றளவு அதிகமான பணியாளர்கள் வீடுகளில் இருந்தவாறு கடமை புரிதல். 
  • சினிமா, மற்றும் அரங்குகள் இயங்கும். அங்கெல்லாம் 1.5 மீற்றர் சமூக இடைவெளி பேணப்படுதல் அவசியம்.
  • பாடசாலைகள் தொடர்ந்து இயங்கும். வீடுகளை விட்டு வெளியே நடமாட எந்தக்கட்டுப்பாடுகளும் இருக்காது.
சுகாதார விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற நிலையிலேயே பிரதமர் மார்க் ரூட்டேயின் இடைக்கால அரசு பகுதியான பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது.

புதிய கட்டுப்பாடுகள் குறித்து உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் 12 வயதுக்கு மேற்பட்டவர்களது சனத்தொகையில் 82 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர். அவ்வாறான நிலையிலேயே அங்கு தொற்றுக்கள் வேகமாக அதிகரித்துள்ளன.வியாழன்று வெளியான புள்ளிவிவரங்களின் படி ஒரு நாளில் புதிய தொற்றாளர்களது எண்ணிக்கை 16,364 ஆகும். தொற்று நோயின் ஆரம்பம் முதல் இதுவரை பதிவாகாத மிக உயர்ந்த எண்ணிக்கை அது என்று கூறப்படுகிறது.

இதேவேளை, டென்மார்க், நோர்வே போன்ற ஸ்கன்டிநேவியன் நாடுகளிலும் நீக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றாதவர்களை மட்டும் வீடுகளுக்குள் முடக்கும் விதமான தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை அறிவிப்பதற்கு ஒஸ்ரியா அரசு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை எதிர்பார்த்துள்ளது என்று அந் நாட்டின் சான்சிலர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க்(Alexander Schallenberg) தெரிவித்திருக்கிறார்.

சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் அறிவிப்பும் விரைவில் அங்கு வெளியிடப்படவுள்ளது.
Previous Post Next Post