நோய்க் கிருமிகளை அழிக்குமாறு உக்ரைனுக்குஉலக சுகாதார நிறுவனம் ஆலோசனை!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன். 
உக்ரைன் நாட்டின் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பாதுகாக்கப்படும்
அதிக ஆபத்தான நோய்க் கிருமிகளை (high-threat pathogens) அடியோடு அழித்து
விடுமாறு உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆலோசனை தெரிவித்துள்ளது.

நோய் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங் கள் ரஷ்யாவின் தாக்குதல்களில் சிக்க
நேர்ந்தால் அங்குள்ள ஆபத்தான கிருமிகள் மனிதர்களில் பரவும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டியே சுகாதார நிறுவனம் அவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
 
உக்ரைன் போரில் உயிரியல் ஆயுதத் தாக்குதல் தொடர்பான செய்திகள் வெளியாகியிருக்கும் ஒரு பின்னணியிலேயே உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு ஓர் ஆலோசனையை வெளியிட்டிருக்கிறது.
 
உக்ரைனில் அமெரிக்கா தனது உயிரியல் ஆயுத ஆய்வு கூடம் ஒன்றை இயக்கி வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சக்ஹரோவா (Maria Zakharova) அண்மையில் கூறியிருந்தார்.வோஷிங்டன் அதனைக் கடுமையாக மறுத்ததுடன் தனது கண்டனத்தையும் வெளியிட்டிருக்கிறது.
 
ரஷ்யா போரில் தனது சொந்த உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்திவிட்டு அவை உக்ரைன் ஆய்வகங்களில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டவை என்று பொய்யான பிரசாரங்களைப் பரப்புவதற்குத் திட்டமிட்டு வருகிறது என்று மேற்குலக புலனாய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைனின் பொதுச் சுகாதார ஆய்வகங்களில் ஏனைய நாடுகளைப் போலவே ஆபத்தான நோய்களைப் பரப்பும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் அறிவியல் ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஆய்வகங்கள் தாக்குதலில் சிக்கினால் கிருமிகள் பரவுகின்ற பேராபத்து இருப்பதை உயிரியல்பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
 
*** *** *** *** ***
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக ஐரோப்பா மற்றும்
ஆபிரிக்க நாடுகளுக்கான உணவு வழங்கல்கள் மிக ஆழமாகச் சீர்குலையும். உலகின் மிக வளமான விவசாய நிலங்கள் பயிரிடப்படாமல்போவதன் காரணமாக இந்த நிலைமை ஏற்படவுள்ளது.

பிரான்ஸின் அதிபர் மக்ரோன் வேர்சாய் அரண்மனையில் இன்று நிறைவடைந்த ஐரோப்பிய மாநாட்டில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த விசேட நெருக்கடிகால மாநாட்டில், ரஷ்யாவுக்கு ஆடம்பரப் பொருள்களின் ஏற்றுமதியை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.

போரின் போக்கைப் பொறுத்து மொஸ்கோ மீது மேலும் மிகத் தீவிரமான தடைகள் விதிக்கப்படும் என்று மக்ரோன் அங்கு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆடம்பரப் பொருள்கள்(luxury goods) ஏற்றுமதிநிறுத்தப்படுவது ரஷ்யாவின் அரசியல் அதிகார மேல் வர்க்கத்தினரை நேரடியாகப் பாதிக்கும் என்று ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன்(Ursula von der Leyen) கூறியிருக்கிறார்.

மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மக்ரோன், உணவு விநியோக சீர்குலைவைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக வேண்டும். உணவு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எங்கள் உற்பத்திகளை மறு மதிப்பீடு செய்யவேண்டும். ஆபிரிக்க நாடுகளையும் கரிசனையில் கொண்டு ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும்-என்று தெரிவித்தார்.

உக்ரைன் விவசாய நிலங்கள் பயிரிடலை இழப்பதன் காரணமாக ஆபிரிக்காவில் அடுத்த 12-18 மாதங்களில் பல நாடுகள் பட்டினிச் சாவை எதிர்கொள்ள நேரிடலாம் - என்றும் மக்ரோன் எச்சரிக்கை செய்தார்.

ஐரோப்பா அதன் எரி சக்தித் தேவையை தானே தன்னிறைவு செய்துகொள்வதற்கான மூலோபாயத் திட்டம் வரும் மே மாதம் வெளியிடப்படும் என்று மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post