ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய ஆயிரக்கணக்கானோர் இடிபாடு! வேலி தாண்டிக் குதிக்க முயற்சித்த 18 பேர் உயிரிழப்பு!!

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
ஸ்பெயினின் ஆபிரிக்காவுடனான எல்லைப் பகுதியாகிய மெலிலாவில் (Melilla) வெளிநாட்டுக் குடியேறிகள் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். 76 பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

மொரோக்கோ ஊடாக ஸ்பெயினின் எல்லைக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுக் குடியேறிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்போது அங்கு ஏற்பட்ட களேபரங்களிலேயே அவலச் சாவுகள் நிகழ்ந்துள்ளன. 

எல்லைக்காவல் படையினருடன் ஏற்பட்ட கைகலப்பு மோதல்களில் சிலர் உயிரிழந்தனர் என்றும் எல்லை வேலி மீது ஏறிக் கடக்க முயன்ற பலர் வீழ்ந்து பலியாகினர் எனவும் மொரோக்கோ நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொரோக்கோ எல்லைக் காவல் படையினர் சுமார் 140 பேரும் இந்த அசம்பாவிதத்தில் காயமடைய நேரிட்டது என்று அந்நாட்டு உள்ளதுறை அமைச்சு தெரிவித்தது. ஸ்பெயின் காவல் படைவீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

பல நாடுகளில் இருந்தும் வந்து ஆபிரிக்காவின் சஹாரா வட்டகை ஊடாக
வடக்கே நகர்ந்து ஜரோப்பாவினுள் நுழைய முயற்சிக்கின்ற குடியேறிகள்
காரணமாக மொரோக்கோ - ஸ்பெயின் இருநாட்டு உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஸ்பெயினின் மெலிலா மற்றும் சியூடா(Melilla and Ceuta) என்ற இரண்டு ஆள் நடமாட்டமற்ற சிறிய எல்லை வேலிப் பகுதிகளைத் தாண்டி ஐரோப்பாவுக்குள் நுழையும் குடியேறிகளைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் அண்மையில் உடன்படிக்கை ஒன்றைச் செய்திருந்தன.

ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி சட்டவிரோத பயண முகவர்களால் அழைத்து வரப்படுகின்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும்
இந்த எல்லை ஊடுருவல்களில் சிக்கித் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.
Previous Post Next Post