லண்டனில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்த பேரன்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ்ப் பெண்ணான 89 வயது மூதாட்டியை அவரது பேரன் கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

லண்டனில் Croydon என்ற இடத்தில் வசித்து வந்த சகுந்தலா பிரான்ஸிஸ் என்ற 89 வயதான பெண்மணி கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அம்பியூலன்ஸ் குழு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே சகுந்தலா உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

சகுந்தலாவை கொலை செய்ததாக அவரின் பேரனான 31 வயதான வெருஷன் மனோகரன் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் தற்போது சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். முழு சூழ்நிலை பற்றி அறிய விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை. சகுந்தலாவின் குடும்பத்தினருக்கு அவர் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் உள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறோம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக சகுந்தலாவின் வீட்டுக்கு அருகே வசிப்பவர் கூறுகையில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்,

அவரது கணவர் 2018 இல் இறந்துவிட்டார். எனக்கு அவரை தெரியாது, ஆனால் இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post