வியட்நாமில் முடிவடைந்த கனடாப் பயணம்! கனடாவில் உள்ள தமிழ் முகவரிடம் கைமாறிய 100 கோடி ரூபாய்!!

கனடா செல்வதற்காக சட்டவிரோத படகுப் பயணத்தில் ஈடுபட்டுத் தற்போது வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத் தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இலங்கையிலிருந்து கனடாவுக்குச் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் முகவர்களுக்கு வழங்கிய பெருந் தொகைப் பணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையிலிருந்து கனடாவுக்குச் சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதற்கு முகவர்கள் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் வரைக்கும் தற்போது வசூலிக்கின்றனர்.

ஒரு தொகைப் பணத்தை ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும் என்றும் கனடாவுக்குச் சென்றவுடன் மிகுதிப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உடன்பாட்டுடன் இந்த சட்டவிரோத பயணம் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து அண்மையில் கனடாவுக்குப் படகு மூலம் சென்றவர்கள் முகவருக்கு 100 கோடி ரூபாய் வரைக்கும் வழங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர்களது கனடாப் பயணம் தோல்வியுற்ற நிலையில் அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

படகில் சென்ற ஒருவர் சனிஸ்ரைசரை அருந்தி உயிரிழந்துள்ள நிலையில் 83 பேர் இலங்கைக்குத் திரும்ப இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனையோர் இலங்கைக்குத் திரும்ப மறுப்புத் தெரிவித்து வருவதுடன், தங்களை வேறு நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

கனடாப் பயணத்துக்காக கடன்களைப் பெற்றும், சொத்துக்களை விற்றும் பணத்தைச் செலுத்தியுள்ள பெரும்பாலானவர்கள் இலங்கைக்குத் திரும்ப முடியாமல் இருக்கின்றது என்று தெரியவருகின்றது.

அதேநேரம் இவர்களுக்கான படகுப் பயணத்தை ஏற்பாடு செய்த முகவர் கனடாவைச் சேர்ந்த தமிழர் என்று கூறப்படுகின்றது. அகதிகளின் படகு வியட்நாம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற பின்னர் அவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது என்று பணத்தைப் பறிகொடுத்தவர்கள் கூறுகின்றனர்.
Previous Post Next Post