பிரான்ஸில் மின் பாவனை அதிகரித்தால் மின் துண்டிப்பு! காலையில் பாடசாலைகள் இடம்பெறமாட்டது!!

பிரான்ஸ் மக்கள் தினசரி மின்சார பாவனையை தன்னார்வ அடிப்படையில் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எக்கோ வாட்ஸ் எனும் திட்டம் இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்கோ வாட்ஸ் என்பது மின்சார நுகர்வைக் காண்பிக்கும் ஒரு பொறிமுறைக் கருவி. இந்தக் குளிர்காலத்தில் மின் துண்டிப்பைத் தவிர்க்கும் முகமாகவே குறித்த கருவி பயன்படுத்தப்படும்.

எக்கோ வாட்ஸ் ஐ பதிவு செய்து கொண்டவர்கள் தங்களின் மின் பாவனையை நேரடியாகக் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பச்சை, செம்மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் மின் பாவனை அளவைக் காண்பித்துக் கொண்டிருக்கும். குறித்த கருவி அடுத்த மூன்று நாட்களுக்கான மின்பாவனைத் தகவல்களையும் வழங்கும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சிவப்பு நிறம் எக்கோ வாட்ஸில் தோன்றும் போது மின் பாவனையைக் கட்டுப்படுத்தாது விட்டால் மின் துண்டிப்பு தவிர்க்கப்பட முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, வரும் குளிர் காலத்தைக் கடப்பதற்கு மின்சாரப் பாவனையை நாட்டில் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தற்போதைய நிலையில் பிரான்ஸ் இருள் மயமாகாது என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும். மின்சாரப் பாவனையை முடிந்தவரை ஒவ்வொருவரும் குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எக்கோ வாட்ஸ் இணைப்புக்கு இது வரை 4 இலட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றார்கள் என்றும், 3 இலட்சம் பயன்பாடுகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பாவனையைக் குறைப்பதற்கு… 
  • வீட்டை விட்டு வெளியேறும் போது வெப்பத்தைக் குறைத்து வைத்தல் வேண்டும்
  • குளிர் காலத்தின் போது யன்னல் தடுப்புக்களை மூடி வைத்திருத்தல் வேண்டும்
  • சமயல் செய்யும் போது பாத்திரங்களை மூடி வைத்திருத்தல் வேண்டும்
  • அத்துடன் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் கைத் தொலைபேசிகளுக்குச் சார்ச் ஏற்றுதலைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பிரான்ஸில் உள்ள குடும்பங்கள் அனைவரும் ஒரு மின் விளக்கை அணைத்தால் 600 மெகா வாட்ஸ் மின்சாரத்தை சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது விடயங்களை அனைவரும் கவனத்தில் கொண்டால் எதிர்காலத்தில் பிரான்ஸ் இருளில் மூழ்குவதைத் தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகள் இடம்பெறமாட்டது...

இதேவேளை பிரான்ஸில் மின்வெட்டு ஏற்பட்டால் காலையில் பாடசாலைகள் இயங்க மாட்டாது என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ் அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து பாடசாலைகளில் ஆசிரியர் சங்கங்கள் தமது அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளன.

இக் குளிர்காலத்தில் திட்டமிடப்பட்டு இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் மின்வெட்டு ஏற்படும் பட்சத்தில் காலை நேரப் பாடசாலைகள் இயங்காது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கல்வி அமைச்சர் இந்த அறிவித்தலை உறுதிப்படுத்தியுள்ளார்.
Previous Post Next Post