யாழ்ப்பாணம், மன்னார், வவுனியாவைச் சேர்ந்த பெண்கள் கொழும்பில் விபசாரத்தில் ஈடுபடுவது அதிகரிப்பு!

கொழும்பில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாகாணத்தைச் சேர்ந்த பல இளம் பெண்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக விபசாரத்தில் ஈடுபடுவது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அண்மையில் கொழும்பு மருதானையில் விபசார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பெண்கள் குழுவினரால் இந்த திடுக்கிடும் விடயம் தெரியவந்துள்ளது.

மருதானையிலுள்ள விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 19 பெண்களை கைதுசெய்துள்ளனர். அதில் 11 பேர் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், ஆனால் குடும்பத்தை நடத்துவதற்கு பணம் அனுப்ப முடியாததாலும், வாழ்வதற்கு போதிய வருமானம் இல்லாததாலும் விபசாரத்தில் ஈடுபட்டதாக இளம் பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, தென்னிலங்கையில் இருந்து சில தரகர்கள் வடமாகாணத்திற்கு வந்து தனியார் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக தெரிவித்து பெண்களை அழைத்து செல்வதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

வடமாகாணத்திற்கு வரும் தரகர்கள் இளம் பெண்களை ஏமாற்றி கொழும்பு மற்றும் தெற்கு பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று குறைந்த காலப் பகுதிக்குள் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post