“சாவு எங்களுக்கு பெரிதல்ல” பிரான்ஸ் அழைத்துச் செல்வதாகக் கூறி கைவிடப்பட்ட தமிழ் இளைஞர்களின் வேண்டுகோள்!! (வீடியோ)

பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட மேலும் 53 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் நிர்கதியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட சிலர் காணொளி மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக கனடா, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக மக்களை அழைத்து சென்று நிர்கத்தியாகிய சம்பவங்கள் வெளியாகிய நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சில தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் போலிமுகவர்களால் ஏமாற்றப்பட்ட இளைஞனொருவன் போலிமுகவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

நாங்கள் பிரான்சின் ஆளுகைக்குட்பட்ட ரியூனியன் தீவில் இருக்கிறோம். எங்களைப் பிரான்சுக்கு அனுப்புவதாகக் கூறி முகவர்கள்,எங்களிடம் பணத்தினை வாங்கி ஏமாற்றி இப்பொழுது இங்கு வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் 53 பேர் இங்கு வந்த நிலையில் அதில் மூன்று பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டு எஞ்சிய 49 பேர் நிராகரிக்கப்பட்டு இருக்கிறோம்.

எங்கள் காணி, வீடு, வளவு என்பவற்றை விற்றுத்தான் இங்கு வந்திருக்கிறோம். மீண்டும் எங்களது நாட்டிற்குச் சென்றால் எங்களால் நிம்மதியாக வாழ முடியாது. எங்களது நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. நாங்கள் கடற்தொழில், விவசாயம் செய்கிறோம் ,

நாட்டில் இந்த பொருளாதார நெருக்கடியினால் மண்ணெண்ணெய், உர பற்றாக்குறை என பல பிரச்சினைகள் காணப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் நாட்டிற்கு சென்று எங்களால் தொழில் செய்ய முடியாது.

மனைவி, பிள்ளைகளை நிம்மதியாக உழைத்து பார்க்க முடியாது. ஏனெனில் எங்கள் சொத்துக்களை விற்றுத்தான் இங்கு வந்திருக்கிறோம். தொடர்ச்சியாக 25 நாட்கள் கடலில் பயணம் செய்து தான் எங்கள் உயிர்களை வெறுத்து தான் இங்கு வந்திருக்கிறோம்.

சாவு என்பது எங்களுக்கு பெரிதல்ல.  நாங்கள் எவ்வளவோ சாவுகளை பார்த்து வந்திருக்கிறோம். மீண்டும் நாட்டிற்கு வருவதாக எங்களுக்கு சிந்தனை இல்லை.

விமான நிலையத்திலும் சில பேரை தங்க வைத்திருக்கிறார்கள். உடனடியாக இந்த சர்வதேச அமைப்புகள் இதில் தலையிட்டு எங்களை வெவ்வேறு நாடுகளுக்கு குடியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
Previous Post Next Post