“மீண்டு வா சுர்ஜித்.” தமிழகம் எங்கும் அழுகுரல்!! முழுப் பிண்ணனி!!! (படங்கள்)

இந்தியா திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனும் இடத்தில் சுர்ஜித்  வில்சன் என்ற இரண்டு வயதுக் குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

இதனால் அப் பகுதியில் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப் பணிகளில் தற்போது தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆள்துளை கிணறு 30 அடி ஆழம் கொண்டது. இக் கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையே இவ்வாறு விழுந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார்.

இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுக்கு சுர்ஜித் வில்சன் (வயது 2) என்ற மகன் உள்ளான். பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார்.

சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில் அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது.

இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில் மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியதாக தெரிகிறது. பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் குழிதோண்டும் பணி இந்த நிலையில் நேற்று பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார்.  வீட்டில் கலாமேரி, சுர்ஜித்வில்சனுடன் இருந்தார்.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் சுர்ஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான். இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார்.

இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார். மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார் மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வருவாய்த்துறையினரும் அங்கு வந்தனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில் ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில் கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அங்கு 4 பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட 5 இயந்திரங்கள்  கொண்டு வரப்பட்டு ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த இயந்திரங்களில் உள்ள விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரவு 8 மணியளவில் சுமார் 15 அடி வரை குழி தோண்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே விராலிமலையில் இருந்து 108 ஆம்புலன்சும் அங்கு வரவழைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால் குழந்தைக்கு மூச்சுத்திணறாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு குழந்தையின் நிலையை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இருந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்துஇ தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுர்ஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குழந்தையை பத்திரமாக மீட்கும் நோக்கில் முதலில் குழந்தையின் ஒரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போடப்பட்டது. மேலும் மற்றொரு கையில் கயிறு மூலம் சுறுக்கு போட முற்பட்ட போது அது பலன் அளிக்கவில்லை. மீண்டும் அம்முயற்சியை மேற்கொண்ட நிலையில் அக்குழந்தை பத்திரமாக மீட்க அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே குழந்தையை மீட்க நள்ளிரவு கோவையில் இருந்து மேலும் ஒரு குழுவும் வந்து முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே குழந்தையை மீட்க மீண்டும் பக்கவாட்டில் குழி தோண்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குழந்தை 10 நேரத்திற்கும் மேலாக ஆழ்துளை கிணற்றில் இருப்பதால் தொடர்ந்து சுவாச கருவி மூலம் சுவாசம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும நாமக்கல்லில் வந்த மீட்பு குழுவினர் துணையுடன் அவர்கள் கொண்டு வந்த உபகரணம் உதவி கொண்டு குழந்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து குழந்தையை மீட்க போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் குழந்தை சுவாசிப்பது நவீன கருவியின் மூலம் பதிவாகியுள்ளது சற்று நிம்மதியை அளிக்கிறது. மேலும் குழந்தையை மீட்க மீட்பு குழுவினர் தொடர்ந்து நம்பிக்கையுடன் முயற்சிகள் மேற்கொண்ட வருகின்றனர்.

அனைவரது வேண்டுகோளும் குழந்தை நலமாக மீட்கபட வேண்டும் என்பது சமூக வளைதளங்களில் பரவிவருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Previous Post Next Post