மட்டக்களப்பில் வீதியில் சென்றவர்களிடம் ஆயுத முனையில் கொள்ளை!

வீதியில் பயணித்தவர்களை இடைமறித்து ஆயுதங்களைக் காட்டி வழிப் பறிக்கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பெரியகல்லாறு ஆலையடிப் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இக் கொள்ளைச் சம்பவத்தில் 7 பேரிடமிருந்து சுமார் 6 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தரித்த இருவர் பிரதான வீதியில் நின்று கொண்டு, வீதியூடாகப் பயணித்தவர்களை வழிமறித்து அவர்களிடமிருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இவ்விதம் 5 வாகனங்கள் கொள்ளையர்களால் மறிக்கப்பட்ட நிலையில் அந்த வாகனங்களிலிருந்த மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், ஏனைய தொழில்களுக்காக கையில் பணத்துடன் சென்ற 7 பேரிடம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post