அதிகரிக்கும் சட்டவிரோத மண் அகழ்வு! வீதியை மறித்து மக்கள் போராட்டம்!! (படங்கள்)

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வுக்கு வீதியை மறித்து மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி - இயக்கச்சிச் சந்தியில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தக் கோரி அப் பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் ஆனையிறவு நீரேரி மற்றும் சுண்டிக்குளம் பகுதிக்கு அண்மையில் காணப்படுவதால் உவர் நிர் உட்புகும் சாத்தியம் காணப்படுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தும், பிரதேசத்தின் வளங்களைச் சூறையாடாதே எனத் தெரிவித்தும் பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஏ-9 வீதியை மறித்து சில மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பளைப் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மண் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்ததன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.




Previous Post Next Post