யாழில் கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா விற்பனை! 142 கிலோ கஞ்சா சுண்டுக்குளியில் மீட்பு!!

யாழ்ப்பாணம், சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் 142 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அதனைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பத் தலைவர் ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டைப் பொலிஸார் முற்றுகையிட்டுச் சோதனை நடத்தியிருந்தனர்.

இதன்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் நிறை 142 கிலோ 945 கிராம் என எடையிடப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பில் வசித்து விட்டுத் திருமணத்தின் பின் குறித்த வீட்டில் வசித்து வருகின்றார்.

சந்தேகநபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், கஞ்சா போதைப் பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post