யாழில் மதுபோதையில் பயணித்த இ.போ.ச. பஸ் சாரதி! 46 பயணிகள் அருந்தப்பு!! (வீடியோ)

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்குப் பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் பயணித்த 46 பயணிகளும் பிறிதொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்றிரவு 8.15 மணியளவில் யாழ்ப்பாணம், நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பேருந்தைச் சோதனையிடும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குப் பயணிக்கும் பேருந்துகளை சோதனையிடும் நடவடிக்கையை 512 ஆவது படைத் தளத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் நாவற்குழியில் இன்றிரவு முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்குப் புறப்படும் பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனையிட முற்பட்ட போது சாரதி மதுபோதையில் இருந்துள்ளமை கண்டறியப்பட்டது.

சாரதியை பேருந்திலிருந்து இறக்கி விட்ட இராணுவத்தினர், பேருந்தைச் சோதனையிட்ட போது இரண்டு பியர் ரின்களும், சாராயப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கையின் கீழ் இருந்து மீட்கப்பட்டது.

சாரதி கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கும் அறிவிக்கப்பட்டது.

46 பயணிகளும் அக்கரைப்பற்றுக்கு பயணிப்பதற்கு கோண்டாவில் சாலையைச் சேர்ந்த மற்றொரு பேருந்தை அனுப்பி வைக்குமாறும் பொலிஸார் அறிவித்தனர்.

மக்களின் பாதுகாப்புக் கருதியே இந்தப் பேருந்தை தடுத்து வைத்து விட்டு பிறிதொரு பேருந்தை வரவழைத்துள்ளோம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


Previous Post Next Post