யாழில் பாலியல் தொல்லை ,கொள்ளைகளில் ஈடுபட்ட கும்பல் கூண்டோடு கைது!

கைக்குண்டுகள், மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை அச்சுறுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் குறித்த கும்பல் இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டு வந்து கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், இரண்டு வாள்கள், கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர் வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலியில் கொள்ளைக் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எஸ். சேனாதீரவின் உத்தரவில் சிறப்புப் பொலிஸ் பிரிவு விசாரணைகளை முடுக்கிவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய தேடுதல் மற்றும் விசாரணைகளில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், இரண்டு வாள்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பல் சாவகச்சேரி, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுகளில் இரவு வேளைகபளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டுள்ளது. மேலும் பெண்கள் உள்ள வீடுகளில் பாலியல் துன்புறுத்தல்களையும் இந்தக் கும்பல் செய்துள்ளது.

கொள்ளையிட்ட 37 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளை நெல்லியடியில் உள்ள நகைக் கடையில் விற்பனை செய்துள்ளனர். கொள்ளையிட்ட நகை எனத் தெரிந்தும் அவற்றை வாங்கிய நகைக் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவர். ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3-4 பேர் உள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று இரவு முற்படுத்தப்படவுள்ளனர். அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.




Previous Post Next Post