பகிடிவதை செய்த மாணவனின் வீடு மீதான தாக்குதல்! உரிமை கோருகிறது ஆவா குழு!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை குற்றச்சாட்டில் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்கால தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதல் மேற்கொண்டதாக ஆவா குழு தமது முகநூலின் ஊடாக உரிமை கோரியுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்தவிநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர்.

எனினும் அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந் நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் “தமிழர்களின் அடையாளமாக காணப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும்.

அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக ராக்கிங் மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது.

ராக்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற தண்டனை தொடரும் இனிவரும் காலங்களில்” என பதிவிட்டுள்ளனர்.










Previous Post Next Post