யாழ்.பொலிஸார் சித்திரவதை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர் தப்பியோட்டம்! (படங்கள்)

பொலிஸ் நிலையத்தில் தடுப்பில் வைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த சந்தேகநபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலிலிருந்து தப்பித்துள்ளார்.

அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த விக்டர் சுந்தர் (வயது-46) என்ற சந்தேகநபரே இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பித்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று முன்தினம் முற்பகல் கைது செய்யப்பட்ட அவர், அன்றைய தினம் மாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.இணைப்பாளரால் பொலிஸ் நிலையத் தடுப்பிலிருந்து அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

நபர் ஒருவரைத் தாக்கியமை மற்றும் ஹேரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சந்தேகநபர் யாழ்.நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதனால் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் விக்டர் சுந்தர் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலிலிருந்து தப்பித்துள்ளார் என்று யாழ்.சிறைச்சாலைக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

Previous Post Next Post