யாழில் 8 பேருக்கும் கொரோனா தொற்றியது எப்படி? சுகாதாரப் பணிப்பாளர் விளக்கம்!!

“யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 20 பேரில் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் 6 பேருடன் ஏனைய 14 பேரும் நெருங்கிப் பழகியிருந்தமையால் அவர்களுக்கு இரண்டாவது தடவை சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர்.  அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்த போதகரால் கடந்த மார்ச் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

சுவிஸ் போதகருடன் நெருக்கமாகப் பழகிய மானிப்பாயைச் சேர்ந்த போதகர், சுவிஸ் போதகரின் சாரதி உள்ளிட்ட அரியாலை மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

அவர்கள் 20 பேரிடமும் ஏப்ரல் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மாதிரிகள் பெறப்பட்டு முதல் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகர் உள்பட 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்கள் 6 பேரும் வெலிகந்தை வைத்தியசாலை கோரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட ஏனைய 14 பேருக்கு நோய் அறிகுறி இல்லாத போதும் முதல் கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 6 பேருடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் 14 பேரில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேரும் வெலிகந்தை வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள். ஏனைய 6 பேரும் தொடர்நது பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் நிலையத்தில் தங்கவைக்கப்படுவார்கள்” என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post