அபாய நிலையில் யாழ்ப்பாணம்! ஊரடங்கு நீக்கம் சாத்தியமில்லை!!- யாழில் பாதுகாப்புச் செயலர்

“கோரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. இங்கு அதிகளவான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஆபத்தான நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டுமாயின் சரியான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். அதனால் சரியான நிலமை ஏற்படும் வரை ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது” இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

பாதுகாப்புத் தரப்பினரின் அறிவித்தல்களையும் சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளையும் கேட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கவேண்டும் எனத் தெரிவித்த அவர், நோய் அறிகுறிகள் இருந்தால் எந்தவொரு அச்சமுமின்றி பரிசோதனைகளை முன்னெடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, பலாலி படைத் தலைமையகத்தில் முப்படைகள், பொலிஸார் மத்தியில் சிறப்புரையாற்றினார். அதன் நிறைவில் ஊடகவியலாளர்களிடம் அவர் கருத்துரைத்தார்.  இதன்போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணத்துக்கு நான் இன்று வருகை தந்ததன் காரணம், இந்த இக்கட்டான காலகட்டத்தில் இராணுத்தினரும் பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களை நேரில் பார்த்து நன்றிகளையும் கௌரவத்தையும் புதுவருடத்துக்கான செய்தியையும் வழங்குவதற்காக வருகை தந்தேன். மாநாடு நடத்துவதற்காக வருகை தரவில்லை.

கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பல் உள்ள மாவட்டங்களாக சில கணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்று. யாழ்ப்பாணம் அதிகளவான மக்கள் வசிக்கும் மாவட்டம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது.

அதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சரியான நிலமை ஏற்படும் வரை ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது.

உலகின் வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மோசமான நிலை இல்லை. சில நாள்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சில எண்ணிக்கையானோருக்கு தொற்று இருப்பதாக அறிக்கை கிடைத்தது.

கொழும்பு மாவட்டத்தில்தான் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளராக ஒன்றைக் கூறிக் கொள்கின்றேன், நாம் அனைவரும் இலங்கையர்கள். இன, மதமாக வேறுபாடுகள் பார்க்கக்கூடாது. கோரோனா வைரஸ் நோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதோ, உயிரிழப்பது பற்றியோ பாதுகாப்புச் செயலாளராக நான் பதிலளிக்க முடியாது. அது சுகாதாரத் துறையின் பொறுப்பாகும். ஜனாதிபதிக்கு பதிலளிக்கவேண்டிய நபராகக் காணப்படுகின்றேன்.

தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. கொள்ளை நோயினால் மக்களுக்கு இழப்பு ஏற்படுமாயின் அவர்களைப் பாதுகாக்கவேண்டியது தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாகும். எனவேதான் முப்படையினரும் பொலிஸாரும் மக்களைக் காப்பாற்ற கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்கள், சுகாதாரத் துறையின் அறிவுரைகளைக் கேட்டு வீடுகளில் இருங்கள் என்று யாழ்ப்பாணம் மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் அவர்களிடம் வேண்டுதல் ஒன்றையும் முன்வைக்கின்றேன், யாருக்காவது நோய் அறிகுறிகள் இருக்குமாயின் பரிசோதனைக்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறானவர்களை தனிமைப்படுத்தலின் பின் விடுவிக்க முடியும் -என்றார்.
Previous Post Next Post