பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது யாழ்ப்பாணம்! -மருத்துவர் காண்டீபன்

“மதபோதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த அதே கணம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், தன் கீழே உள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பை பயன்படுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் 15 தொற்றாளர்களுடன் கோரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார்.

சுகாதாரத் துறையினரது சேவை, யாழ்ப்பாணம் சமூகம் இன்று பெரும் சேதத்தைத் தடுக்க பங்களித்தது என்றால் மிகையாகாது” இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் மருத்துவர் தங்கராஜ் காண்டீபன் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இவரது தலைமையில் இன்று உண்மையில் நாம் (சுகாதாரத்துறை) அனைவரும் எமது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்தோம் என பெருமை கொள்ள கூடிய நிலையில் யாழ்ப்பாணத்தை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

மத போதகருடன் நெருங்கிப் பழகியவர்களை சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் சேர்ந்து தொடர்புகளை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும் இத்தொடர்புகளை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீட்டியதுமே இதற்கு காரணமாகும்.

யாழ்ப்பாணம் சமூகம் இன்று பெரும் சேதத்தைத் தடுக்க இவை பங்களித்தன என்றால் மிகையாகாது. ஆயினும் இன்று தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கும் கோரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்க பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

மேலும் மதகுருவுடன் நெருங்கி பழகிய அனைவருக்கும் மீள பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனம் கூறியபடி மூன்று தடவைகளாவது செய்ய வேண்டும். முதல் தொடர்புடையவர்களை மட்டுமல்ல இரண்டாம், மூன்றாம் தொடர்புடையவர்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்துவது சம்பந்தமாக மாகாண பணிப்பாளர் தனது ஆளணியினருடன் மீளாய்வு செய்தல் வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகம் மீள் ஆரம்பிக்கும் திகதியையும் மீளாய்வு செய்தல் வேண்டும்.

12 நாள்களின் பின்னர் இன்று தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்கு காரணம் நாங்கள் அதிகளவிலான பரிசோதனைகளை செய்யாமலும், பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களை மீள பரிசோதிக்காமையுமே காரணமாகும்.

பலாலியில் இருந்த 14 பேருக்கும் இன்று 12 நாள்களின் பின்னரே இப்பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் வைத்தியசாலைகளில் மீண்டும் அவசியமற்ற சேவைகளை ஆரம்பிக்கும் போது உள்ள ஆபத்துக்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

ஆகையினால் நாள் ஒன்றில் செய்கின்ற பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்தல் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும் – என்றுள்ளது.
Previous Post Next Post