யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பூசகர் தாக்கப்பட்டுக் கொள்ளை!

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பூசகரைத் தாக்கிய கொள்ளையர்கள் அவருடைய வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கோவிலுக்கு அண்மையில் தனித்துவாழும் பூசகரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 03 மணியளவில் பூசகரின் வீட்டினுள் நுழைந்த இருவர் அவரை கொட்டன் தடிகளால் சரமாரியாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த நகைள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பன உள்ளடங்கலாக ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதேநேரத்தில் சாவகச்சேரியின் கல்வயல் கிராமத்தில் உள்ள ஆலயங்கள் இரண்டில் ஒலிபரப்பு சாதனங்கள் திருட்டுப்போயுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கல்வயல் பிள்ளையார் கோவில் மற்றும் கல்வயல் தேவதவனப் பிள்ளையார் கோவில் ஆகிய இரண்டு கோவில்களுமே உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post