யாழ்.பருத்தித்துறையில் இராணுவம் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன? (படங்கள்)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகைப் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் புலோலியைச் சேர்ந்த இளைஞர் காயமடைந்தமை தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தரப்பினர், வைத்தியசாலைத் தரப்பினர் மற்றும் இளைஞரின் தரப்பினர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேற்றிரவு இரவு 10.30 மணியளவில் மந்திகைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருவர் யாழ்ப்பாணம் பக்கமிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துள்ளனர்.

ஊரடங்கு வேளை என்பதால் வீதியில் கண்காணிப்பில் நின்ற இராணுவத்தினரில் ஒருவர் அவர்களை நிறுத்துமாறு கையை நீட்டியுள்ளார். அப்போது அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த கல் அல்லது கையில் பொருத்தி தாக்குவதற்காக பயன்படுத்துகின்ற கத்திபோன்ற ஒரு உபகரணத்தினால் இராணுவத்தினரின் கையில் தாக்கியிருக்கின்றார்.

சம்பவத்தில் குறித்த சிப்பாயின் மணிக்கட்டுப் பகுதி கடும் காயத்துக்கு உட்பட்டிருக்கின்றது. சிப்பாய் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு ஆரம்ப சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பலாலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சுமார் இரண்டு மணிநேரம் கழித்து அதே வீதியில் தனியாக இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்திருக்கின்றார். அவரையும் மறிப்பதற்கு இராணுவத்தினர் முற்பட்ட நிலையில் அவரும் நிற்காமல் பயணிக்க அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும் குறித்த இளைஞர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு சன்னங்கள் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. நெஞ்சு, கை, கால் ஆகிய மூன்று இடங்களில் அவர் காயம் அடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞர் அங்கு தரிக்காமல் மோட்டார் சைக்கிளைத் திருப்பி காந்திகிராமம் பகுதிக்கு சென்றிருக்கின்றார். அங்கிருந்த அவருடைய நண்பர்கள் பொலிஸாரின் அவசர தொலைபேசி தொடர்பு இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு தொடர்பெடுத்து சம்பவம் தொடர்பில் அறிவித்த நிலையில், பொலிஸார் அங்கு சென்று இளைஞரை அதன் பின்னரே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது.

அந்த இளைஞரின் தரப்பு கருத்து தெரிவிக்கையில்,

காயமடைந்த இளைஞர் அனுசன் (வயது 23) முறாவில், புலோலி என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்டவர். அவருடைய தந்தையார் காந்திகிராமம் பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

தந்தைக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்று கொடுத்துவிட்டு அனுசன் வீடு திரும்புவார். நேற்றும் வழமைபோல 7.30 மணியளவில் உணவு கொண்டுவந்தவர், நண்பர்களுடன் இருந்துவிட்டு திரும்புவதற்கு நேரம் தாமதமாகியதாகத் தெரிவித்துள்ளனர.

அதேவேளை காயமடைந்து தங்கள் பகுதிக்கு வந்து தகவல் வழங்கிய பின்னர் அதிக குருதிப்போக்கினால் அவர் மயக்கமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Previous Post Next Post