நயினை நாகபூசணி அம்மனை வழிபட கட்டுப்பாடுகள் தளர்வு! அமைச்சரவை அனுமதி!!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சமூக இடைவெளிகளை பேணி அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், உள் வீதியில் சுமார் 70 அடியவர்களையும் வெளி வீதியில் சுமார் 300 அடியவர்களையும் அனுமதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தின்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.


இந் நிலையில் பெருமளவான அடியவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும் கொரோனா தொடர்பான முற்பாதுகப்பு நடவடிக்களினால் அடியவர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இவ்விவகாரம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அடங்கிய அமைச்சரவை அமைச்சர்கள், அடியவர்களின் வழிபாட்டு செயற்பாடுகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தினை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையிலேயே, சமூக இடைவெளியைப் பேணுவதுடன் சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்கள் உற்சவகால வழிபாடுகளில் கலந்து கொள்ளவதற்கு அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post