மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு யாழ்.நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றங்களைப் புரிந்த மூவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை முற்படுத்தப்பட்டனர். மதுபோதையில் சாரத்தியம் செய்தமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் மூவருக்கும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மூவருக்கும் குற்றச்சாட்டுக்கள் வாசித்துக் காண்பிக்கப்பட்டன. மூவரும் தம்மீதான குற்றச்சாட்டுக்களை மன்றில் ஏற்றுக்கொண்டனர்.

“மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றத்துக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமைக்கு ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.
Previous Post Next Post