யாழில் ஒருவருக்குக் கொரோனா! 70 பேர் சுயதனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 70 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.


சவுதி அரேபியாவிலிருந்து கடந்த 7ஆம் திகதி நாடு திரும்பிய ஒருவர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றார்.

கடந்த 25ஆம் திகதிவரை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என்று சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்படிருந்தது. அதன் பின்னர் அவர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மீள மாற்றப்பட்டிருந்தார்.

அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் நால்வர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதாரக் குழு நேற்று கூடியது. அதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் விவகாரம் கலந்துரையாடப்பட்டது.

கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயன்படுத்தினார் என்றும் வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்தார் என்றும் தகவலளிக்கப்பட்டது.

அதனால் ஆபத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 7ஆம் விடுதியில் ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதிவரை சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படவேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் அவர்களைக் கண்டறிந்து சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தும் பணி நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாணம் மற்றும் பொலநறுவை, குருநாகல் என சுமார் 70 பேர் இவ்வாறு அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post