இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம்! ரவிராஜின் உருவச் சிலைப் பகுதி அடித்துடைப்பு!! (வீடியோ)


யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சசிகலா-ரவிராஜிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி ஏற்பட்ட விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலை கறுப்பு,சிவப்பு துணிகளால் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த சிலைக்கு அருகிலிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டு அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.


இதேவேளை,நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு கட்சிகளின் அடிப்படையில் பெறப்பட்ட விருப்பு வாக்குகள் கணக்கெடுக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி சார்பில் 2ஆம் இடத்தில் இருந்ததாக கூறப்பட்ட சசிகலா-ரவிராஜ் இறுதியில் நான்காவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் யாழ். தேர்தல் மாவட்ட வாக்குகள் எண்ணப்பட்ட யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் கடந்த வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை குழப்பமான சூழல் நிலவியது. இதன்போது விசேட அதிரடிப்படையினரால் அங்கிருந்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

இத்தாக்குதல் சம்பவத்தில் சசிகலா-ரவிராஜின் மகள் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post