வேலணை பிரதேச சபையால் மண்டைதீவில் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி கால்நடைகள்!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் கட்டாக்காலிக் கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவுப் பகுதியில் தற்போது செற்செய்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த கட்டாக்காலிக் கால்நடைகளால் பயிர்களுக்குப் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில், “மண்டைதீவு விவசாயி ஒருவரின் ஆதங்கம்” என்ற தலைப்பிட்டு யாழ்ஒளி இணையமும் கடந்த 26 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

இந் நிலையில் இன்றைய தினம் மண்டைதீவுப் பகுதியில் கட்டாக்காலிக் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, வேலணை பிரதேச சபையின் மண்டைதீவு உப அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

குறித்த கால்நடைகளை 10 நாட்களுக்குள் உரிமையாளர்கள் உரிமைகோராதவிடத்து பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மண்டைதீவுப் பகுதியில் கட்டாக்காலிக் கால்நடைகளால் விவசாயிகள் மற்றும் வீதிகளில் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகப் பல தரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்றைய தினம் வேலணை பிரதேச செயலகத்தில் இது தொடர்பான மக்கள் சந்திப்பொன்று நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post