யாழ்.பருத்தித்துறையில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பருத்தித்துறை ஓடக்கரையில் ஒரே குடும்பைத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாதம் தங்கியிருந்து வீடு திரும்பிய குடும்பத்தில் 34 வயதுடைய குடும்பத் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் அவரது மனைவி, பிள்ளை மற்றும் மாமியார் என மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த நிலையில் திரும்பிய குடும்பம் கடந்த 16 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குடும்பத்தின் தலைவரது மாதிரிகள் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் அவர் யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் (மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் மாமி) தொடர்ந்து சுயதனிமைப்பட்டனர்.

அவர்களிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் குடும்பத்தலைவி, அவரது தாயார் மற்றும் பிள்ளைக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 315 பேருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்களில் மூவருக்கு மட்டும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post