யாழில் தனியார் பஸ் நடத்துனருக்குக் கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை- கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 379 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வலைப்பாடு மீன்வாடியில் தொழிலில் ஈடுபடும் அவர் கோரோனா தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – கச்சேரி தனியார் பேருந்து சேவையின் நடத்துனர் என்று தெரிவிக்கப்பட்டது.

செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண்.

மற்றையவர் மன்னார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர். அவர் அறிகுறிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருடன் பணியாற்றும் ஆடைத் தொழிற்சாலையில் 120 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர் ஒருவருக்கு மட்டும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.
Previous Post Next Post