சுவிஸில் நடைபெற்ற ஓவியப் போட்டி! ஈழத் தமிழ்ச் சிறுமியின் ஓவியம் முதலிடம்!! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி ஒன்று நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறையை பிரதிபலிக்கும் வகையில் ஈழத் தமிழ்ச் சிறுமியால் வரையப்பட்ட ஓவியம் முதலிடம் பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்று அதன் 19ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது.

இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்ற தலைப்பில் கடந்த 19ஆம் திகதி நடத்தப்பட்ட இவ் ஓவியப் போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறு போட்டியில் பங்கேற்றிருந்த ஆயிரம் பேரில் ஒருவராக ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு என்ற புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ்ச் சிறுமியும் பங்கேற்று ஓவியத்தை வரைந்திருந்தார்.

ஈழத்தில் தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறைகளையும் இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனவழிப்பு செயற்பாடுகளையும் தனது ஓவியத்தின் ஊடாக சிறந்த முறையில் வெளிப்படுத்தி பார்ப்போரது மனங்களில் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஓவியத்தை வரைந்துள்ளார் அபிர்சனா தயாளகுரு.

குருந்தூர்மலையில் ஆதிகாலம் முதல் இருந்த ஆதிசிவனை அப்புறப்படுத்திவிட்டு புத்தர் சிலையை நிறுவியுள்ள காட்சியை தத்ரூபமாக வரைந்து இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறலையும்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் நடத்தும் நீதிகோரிய போராட்டத்தை வெளிப்படுத்தியும், போரின் இறுதிக் காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்வது உள்ளிட்ட தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் காட்சி, போரின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சி என ஈழத் தமிழினம் சந்தித்த, சந்தித்து வரும் அடக்குமுறைகளையும், அழித்தொழிப்புகளையும் உயிரோட்டமாக தனது ஓவியத்தில் கொண்டு வந்திருந்தார் சுவிட்சர்லாந்து வாழ் ஈழத்தமிழ்ச் சிறுமி அபிர்சனா தயாளகுரு.

ஆயிரம் போட்டியாளர்களின் ஓவியங்களுக்கு மத்தியில் அபிர்சனாவின் குறித்த ஓவியம் முதலாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post